16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய இயற்கைய அனர்த்தத்தினை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கும், வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களுக்கும் மிகக் கனமழை தொடர்ச்சியாக கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தெளிவான வானிலை காணப்பட்டாலும் கூட இடையிடையே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடைய கரையோர பகுதிகளில் காற்றினுடைய வேகம் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் முப்பதாம் திகதி வரை மலை வீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது கிடைத்து வருகின்ற கனமழை நாளை நண்பகல் நிறைவு பெற்றாலும் கூட இடையிடையே கனமழை முதல் மிக கனமழை திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
எதிர்வரும் முப்பதாம் தேதி அளவில் இந்த புயல் சென்னைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடக்கின்ற போது, வடக்கு மாகாணத்தினுடைய யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சிக்கு சற்று வேகமான காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.